அரச தலைவர் தேர்தலில் தனிவழி செல்லவும் தயார்! – சு.க. பகிரங்க அறிவிப்பு; மஹிந்த அணி அதிர்ச்சி
“புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடியாது” எனவும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அறிவிப்பு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என அறியமுடிகின்றது.
ஏற்கனவே மும்முனைக் கடும் போட்டி காணப்படுகின்றது என்றும், பெரும்பான்மை மக்களின் வாக்குகள் பிளவுபடப் போகின்றது என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துக் களமிறங்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.