சு.கவில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை கோட்டாபய ராஜபக்ச இன்னமும் பெறவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவருடன் நாம் பேச்சு நடத்துவோம். எமது பக்கத்திலும் வேட்பாளர் ஒருவர் இருக்கிறார். ஆனால், இருவரைக் களமிறக்கி நெருக்கடி நிலைமையை உருவாக்க விரும்பவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் தனித்து வெற்றிபெற முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசீர்வாதமும் அவசியம். ஆகவே, கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டால் அவரின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும். இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர மேலும் கூறினார்.