யாழ். வடமராட்சியில் இளம் குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை! – கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கைகள் பின்புறம் கட்டப்படும் கழுத்து பஞ்சாபி சோலினால் இறுக்கிச் சுற்றப்பட்ட நிலையிலும் அவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை நண்பகல் மீட்கப்பட்டுள்ளது

தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெகநாதகுரு கிருபாலினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

“வீட்டில் இருந்த மேற்படி இளம் குடும்பப் பெண் இன்று அதிகாலை காணாமல்போனார் என்று கணவனால் தெரிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டது.

பெண்ணின் கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்ததுடன் அவரது கழுத்து பஞ்சாபி சோலினால் இறுக்கிச் சுற்றப்பட்டு வாயில் இருந்து நுரை வெளியேறிக் காணப்பட்டது.

சம்பவ இடத்துக்குப் பருத்தித்துறை பதில் நீதிவான் வருகை தந்துடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த இளம் குடும்பப் பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *