சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 22 பேர் பரிதாபமாக மரணம்!
மும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
புனே நகரில் உள்ள கோந்த்வா பகுதியில் தலாப் பள்ளிவாசல் அருகே குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. இந்தப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இடத்தின் ஓர் ஓரத்தில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்த கூடாரங்களையொட்டி அமைக்கப்பட்டு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22 அடி உயர சுற்றுச்சுவர் கடந்த 29ஆம் திகதி இடிந்து விழுந்தது. தொழிலாளர்களின் கூடாரங்கள் மீது அந்த சுவர் விழுந்து அமுக்கியது.
இதில் கூடாரத்தில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.
இந்தத் துயரத்துக்கு கனமழை ஒரு காரணமாக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவரின் பலவீனம் மற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் நடந்த கட்டுமான பணியில் அலட்சியம் ஆகியவை மற்றொரு காரணமாக அமைந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், 2 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, “உடல் ஒன்றின் கீழ் இருந்த பெண் ஒருவரை நாங்கள் மீட்டுள்ளோம். சிறந்த சாதனங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதுபோன்ற மிக நெருக்கடியான இடத்தில் மீட்புப் பணியை மேற்கொள்வது கடினம் நிறைந்த ஒன்றாக உள்ளது” – என்றார்.