‘சிவப்பு எச்சரிக்கை’யிலேயே வசமாக சிக்கினார் மில்ஹான்! – இன்ரர்போல் பெருமிதம்  

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கியமான சந்தேகநபரான அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் (வயது 29) உட்பட நான்கு சந்தேகநபர்கள் மத்திய கிழக்கில் கைதுசெய்யப்படுவதற்கு தங்களது சிவப்பு அறிவித்தலே காரணமாக அமைந்தது என இன்ரர்போல் (interpol)) தெரிவித்துள்ளது.

இன்ரர்போலின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் (Jürgen Stock) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையரான மில்ஹான், பயங்கரவாதம் மற்றும் கொலைகள் என்பன தொடர்பில் குற்றச்சாட்டுக்குள்ளான நிலையில் தேடப்பட்டு வந்தவர்.

இலங்கையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சம்பவ பதிலளிப்புக் குழு ஒன்று நிறுவப்பட்டிருந்ததுடன், அதற்கமைய சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்கான முதல் சர்வதேசக் குழு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன், மே 22ஆம் திகதிவரை பகுப்பாய்வுகளையும், விசாரணைகளையும் நடத்தியது.

அதன் அடிப்படையில் முக்கியமான சூத்திரதாரிக்கு எதிராக உலகளாவிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் அப்படையில் முக்கியமான சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டமையானது, நடைபெற்றுவரும் விசாரணைகளின் முக்கியமான படிநிலை என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இன்ரர்போல் பெருமிதம் கொள்கின்றது எனவும் அதன் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *