ஐ.தே.கவில் அத்தநாயக்க மீளவும் இணைய முடியும்! – அகிலவிராஜ் அழைப்பு
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு விரும்பினால் தாராளமாக இணைய முடியும் என்று கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் இணையவுள்ளார் என்று கதை அடிபடுவது பற்றி அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் மீண்டும் இணைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரை விடமும் மிகவும் மோசமாகத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விமர்ச்சித்தவர்கள் எல்லோரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்கள். அவர் விரும்பினால் இணையலாம்.
அவர் கட்சிக்கு அதிக சேவைகள் செய்தவர்.அவரது சேவையை நாம் மதிக்கின்றோம்.ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் கட்சி. எவரையும் விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த பக்கம் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.