சஹ்ரானின் சொந்தங்களின் சடலங்கள் சாய்ந்தமருதில் இன்று தோண்டி எடுப்பு!

 

சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீரவாதிகளினதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள், மரபணுப் பரிசோதனைகளுக்காக, இன்று தோண்டி எடுக்கப்பட்டன.

அம்பாறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்தச் சடலங்கள் நீதிவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியன்று, கல்முனை – சாய்ந்தமருது சுனாமி கிராமத்திலுள்ள வீடொன்றில், பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

இதன்பின்னர் தீவிரவாதிகள் வீடொன்றில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து 6 ஆண்களினதும், 3 பெண்களினதும், 6 சிறுவர்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளினதும், அவர்களின் உறவினர்களினதும் சடலங்கள், கடந்த மே மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதைக்கப்பட்டன.

இந்தநிலையிலேயே, மரபணுப் பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *