ரணில் யாழ். வந்த நேரத்தில் பலாலியில் குண்டுவெடிப்பு! – இராணுவச் சிப்பாய் மரணம்; மேலும் இரண்டு பேர் காயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

ஆயினும் திட்டமிட்டமை போன்று இன்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில், ஹெலியில் யாழ். நகரை வந்தடைந்தார்.

பிரதமர் யாழ்ப்பாணம் வருவதற்குச் சற்று முன்னர் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றமையால் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டதாக அறியக் கிடைத்தது.

இன்று மாலை பலாலி இராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் இராணுவ அணி ஒன்று ஈடுபட்டிருந்தது என்றும், இதன்போதே குண்டுவெடிப்பு நடந்தது என்றும் இராணுவத் தரப்பு தெரிவித்தது.

சிரமதானப் பணியின்போது கல் ஒன்றை நான்கு இராணுவச் சிப்பாய்கள் இணைந்து அகற்ற முற்பட்டனர். அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.

இந்த வெடி விபத்தால் சம்பவ இடத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தரப்புக்கள் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்பு குறித்து இராணுவப் பொலிஸாரும், பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனக் கூறப்பட்டது.

பிரதமரின் யாழ்ப்பாண வருகையை ஒட்டி யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *