கொழும்புப் பல்கலைக்குள்ளும் ஊடுருவிய சஹ்ரான் குழுவினர்! – கைதாகிய மாணவனிடம் தீவிர விசாரணை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்பைப் பேணினார் எனக் கூறப்படும் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார் எனத் தெரிவித்தே குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாரியின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மற்றும் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளன எனப் பொலிஸார் கூறினர்.
இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, “என்னதான் பாதுகாப்பை மேற்கொண்டாலும் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்குள் குண்டுகளை வைத்துவிட்டோம்” என்று எழுதப்பட்ட அநாமதேயச் சுவரொட்டிகள் சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலும் கைதாகியுள்ள மாணவனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.