அஷ்ரப்பின் வழியில் நின்று பிரேரணையை எதிர்கொள்க! – ரிஷாத்துக்கு பொது எதிரணி ஆலோசனை
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுநரான அமரர் அஷ்ரப்பின் வழியில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எதிர்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இன்று சபையில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுநரான அமரர் அஷ்ரப்புக்கு எதிராக அன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்தச் சவாலை அஷ்ரப் எதிர்கொண்டார். அத்துடன், தேரர் ஒருவருடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்திலும் பங்கேற்று தான் குற்றவாளி அல்லன் என்பதை அஷ்ரப் நிரூபித்தார்.
அதேபோல் அமரர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. பதிலுரை மூலம் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
எனவேதான் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை, குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லையெனில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்க வேண்டும்” – என்றார்.