இராணுவத் தளபதிக்கு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவே இல்லை! – பிரேரணையைச் சாடி ஆசு மாரசிங்க கருத்து
“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை விடுவிக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி என்னிடம் தெரிவித்தார்.”
– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறினார்.
சபையில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தொடர்பான விபரத்தை மட்டுமே தன்னிடம் கேட்டார் எனவும், குறித்த நபரை விடுவிக்குமாறு அவர் தனக்கு எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க என்னிடம் கூறினார்.
இராணுவத் தளபதியுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவை பற்றி கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதிக்கு அவர் அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, இந்தப் பிரேரணையை எப்படி நம்புவது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.