காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் போர்க்கொடி!
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களும் திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் மற்றும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அதேவேளை, காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் அது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.