மோட்டார் சைக்கிள் விபத்தில் துன்னாலை இளைஞர் மரணம்!
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன் (வயது -18) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும், பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இளைஞர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.