குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது ஐ.நா.! – அதன் வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தன் வலியுறுத்து

“பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். இலங்கை அரசு குற்றங்களை இழைத்துவிட்டு அவற்றிலிருந்து தப்பிவிடலாம் என்று முனைகின்றது. அதற்கு ஐக்கிய நாடுகள் சபை இடமளிக்கக் கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹானாசிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனுக்கும், ஹனாசிங்கருக்கும் இடையே நேற்று மாலை கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றிருந்தது. அந்தச் சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். குற்றங்களை இழைத்துவிட்டு அவற்றிலிருந்து தப்பிவிடலாம் என அரசு முனைகின்றது.

அதற்கு ஐ.நா. இடமளிக்காது என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதிலிருந்து சற்றேனும் பின்வாங்க முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுப் பணியகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு அமைப்பது தொடர்பாகவும் முனைப்புக் காட்டப்படுகின்றது.

இந்த மூன்று கட்டமைப்புக்களும் ஒன்றாக இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை வழங்குவதற்காகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பெரும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *