தமிழர் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சி! – சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சித்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கான தீர்வை எந்த அரசும் பெற்றுத் தராது என்பதாலேயே தந்தை செல்வா தமிழீழக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார்.
அதன் அடிப்படையிலேயே வடக்க – கிழக்கில் பிரபாகரனின் தலைமையில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எனினும், அந்தப் போராட்டம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மெளனிக்கப்பட்டது.
தற்போது தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு, அவர்களின் இடங்கள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறான நகர்வுகள் குறிப்பாக கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.