அதிவேக நெடுஞ்சாலையில் இரத்திரனியல் அட்டை அறிமுகம்!
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்காக, புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஈ.ரீ.சீ. ( ETC ) அட்டைக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும்.
புதிய கொடுப்பனவு மூலம் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தும் பணிகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும்.
இந்த வசதி தற்பொழுது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் உண்டு.
ஜா – எல, சீதுவ, கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் இந்த அட்டையைப் பதிவு செய்வதற்கான பணிகள், தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை
1969 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும். கொழும்பு சுற்றுவட்ட வீதி மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் இந்த அட்டையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியேறும் பகுதியில் பணம் செலுத்திப் பயணிக்கும் பொழுது, மணித்தியாலத்துக்கு 250 வாகனங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மணித்தியாலத்துக்கு 1250 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறக்கூடியதாக இருக்கும்.
பண்டிகைக் காலத்திலும் அலுவலக நேரத்திலும் ஏற்படும் நெருக்கடி நிலையின்போது நிலவும் கியூ வரிசைக்கு, இதன் மூலம் தீர்வு ஏற்படும் என்று, பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.