யாழ்ப்பாணம் விபத்துக்களில் இளைஞர், வயோதிபர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இளைஞர் ஒருவரும் வயோதிபர் ஒருவருமே விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
அல்லைப்பிட்டியில் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது – 21) என்பவரே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளம் குடும்பஸ்தர், டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்றும், படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தார்.
நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த சேது அன்ரனி (வயது – 79) என்பவரே உயிரிழந்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டது.
49 சிசி மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் சம்பவத்தில் படுகாயமைடந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.