பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது! – மஹிந்த வலியுறுத்து
ஐ.நா. மனித உரிமைகள் சபையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து, இலங்கை அரசு விலகிக் கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை, இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் ஐ.நா. கிளை அலுவலகத்தை நிறுவவும் வழிவகுப்பதாய் அமையும்.
தருஸ்மன் அறிக்கை மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் உள்ளடக்கங்கள் பொய்யான விடயங்கள். இவற்றிலிருந்து இலங்கை விலகிச் செல்லவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் மனித உரிமைகளின் மறைவில் இலங்கை நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படும். கலப்பு நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கப்படும்” – என்றார்.