நெய் எனக்கூறி வத்தளையில் மிருக கொழுப்பை விற்றவர் கைது!

நெய் எனக் கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால்  மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை  நீதி மன்றத்தினால்  (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த போலி நெய்யை  அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  எம்.எஸ்.எம்.பௌசரின் பணிப்புரைக்கமைய,

இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதிகார சபை அதிகாரிகள்  சுற்றிவளைத்து  இந்த வர்த்தகரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து பத்து வருடங்களுக்கு மேலாக இறக்குமதி செய்யப்படும்  99 சதவீதம்  உண்ணக்கூடியதென குறிப்பிடப்படும்  இந்த மிருக கொழுப்பு புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த மிருக கொழுப்பை கொள்வனவு செய்தே  இந்த குறிப்பிட்ட வத்தளையை சேர்ந்த வர்த்தகர் 4.5 லீட்டர் கொள்ளளவு உள்ள கொள்கலனில் அதனை அடைத்து  நெய் என குறிப்பிட்டு போலியாக  விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேயாவிலிருந்து மிருக கொழுப்பை இறக்குமதி செய்யும் பிரபலமான நிறுவனம், கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகளுக்கு இதனை விற்பனை செய்து வந்துள்ளது.

இந்த வியாபாரிகளிடமிருந்தே வத்தளை வர்த்தகர் இதனை கொள்வனவு செய்து பாம் எண்ணெய் யுடன் கலந்து நெய் என விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 18 லீட்டர் கொள்ளளவான கலனில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிருக கொழுப்பு உள்நாட்டில் 4 1/2 லீட்டர் கொள்கலனில் அடைக்கப்பட்டே இந்த மோசடி வர்த்தகம் இதுவரைகாலமும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது

இந்த போலி நெய்யானது  பிரியாணி, பிரைட் றையில் மற்றும் பல உணவுப்பொருட்கள் சமைப்பதற்கான உள்ளடக்க சேர்மானமாக  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அது மாத்திரமன்றி மத தலங்களின் முன்பாக நெய் எனவும்  விற்பனை செய்யப்பட்டு வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் புறக்கோட்டை நெய் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் பல்வேறு  நிலையங்களில் மேற்கொண்டு சோதனைகளில் ஈடு பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட மேலும் ஏழு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *