தெற்காசியப் பிராந்தியத்தில் போர்ப்பதற்றம்! அமெரிக்கா, ரஷ்யாவும் களத்தில்!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார் என அமெரிக்கா மற்றும் ரஷியா அறிவித்துள்ளன.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று கூறி ஏற்கனவே பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா இரத்து செய்துவிட்டது.
இம்ரான் கான் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியா நிராகரித்தது. பயங்கரவாதம் விவகாரத்தில் இந்தியாவின் கூற்றை பலமுறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிரூபணம் செய்தனர்.
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அதிரடியை மேற்கொண்டது. இதனையடுத்து இருநாடுகள் இடையே காணப்படும் மோதல் போக்கால் போர் பதற்றம் காணப்பட்டது.
ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இருநாடுகளும் கட்டுப்பாட்டை கடைபிடித்து அமைதியை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா மற்றும் ரஷியா கூறியுள்ளது. வடகொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
இதேபோன்று அமைதியை ஏற்படுத்த இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷியாவும் அறிவித்துள்ளது.
ரஷியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெளிவரும் செய்திகள் கவலையை ஏற்படுத்துகிறது. நாங்கள் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம்.
இருதரப்பும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.