புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி! எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய விமானங்கள் குண்டு மழை! – ஜே.ஈ.எம். அமைப்பின் கட்டுப்பாட்டு அறையும் தகர்ப்பு
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிரடித் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயற் பட்டு வருகின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் – 2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
12 போர் விமானங்கள், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடித் தாக்குதலில் பலாகோட், சகோதி, முசாப்பர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கக் கட்டுப்பாட்டு அறையும் இந்தத் தாக்குதலில் சின்னாபின்னமானது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய விமானப்படையின் நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கியுள்ளார். சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.