புத்தளத்தில் காதல் ஜோடி குளத்தில் மூழ்கி மரணம்!
வென்னப்புவ வைக்கால பிரதேசத்திலிருந்து, வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்த இளைஞரும் யுவதியும், நேற்று மாலை (18) புத்தளம் – நவகத்தேகம பிரதேசத்திலுள்ள குளத்தில் நீராடிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை புத்தளம் பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.
குறித்த இருவரும், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டுவந்து, நவகத்தேகம பிரதேசத்திலுள்ள இளைஞரின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று மாலை (18) கெலேவெவ குளத்தில் நீராடச் சென்றிருந்தபோதே, இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
வென்னப்புவ – வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த, 21 வயது இளைஞரும், நாத்தாண்டி கஹட்டவில பிரதேசத்தைச் சேர்ந்த, 17 வயதுடைய யுவதியுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குளத்தில் நீராடிய போது, யுவதி அக்குளத்திலிருந்த குழி ஒன்றில் விழுந்துள்ளார். அதனைக் கண்ட இளைஞர், தனது காதலியை மீட்கச் சென்றபோது அவரும் அக்குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனை அவதானித்த அங்கிருந்த சிலர், இவர்கள் இருவரையும் குளத்திலிருந்து மீட்ட போதிலும், இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில், நவகத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.