தூபி மீது ஏறிப் புகைப்படம் எடுத்த 8 மாணவர்களும் இன்று விடுவிப்பு!
ஹொரவபொத்தானை- கிரலாகல புராதன தூபி மீது ஏறிப் புகைப்படம் எடுத்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களையும் கெபித்திகொல்லாவ நீதிமன்றம் இன்று (05) விடுவித்துள்ளது.
கெபித்திகொல்லாவ நீதிவான் எச். கே. மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
8 பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப் ஆகியோர் கெபித்திகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர்கள் இதனை அறியாமல் செய்தனர் எனவும், இவர்களின் எதிர்காலம் குறித்து மன்னித்து விடுதலை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து முதலாம், இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா ஆயிரம் ரூபா செலுத்துமாறும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 50ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதிவான் இன்று கட்டளையிட்டதுடன் 8 மாணவர்களையும் விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.