பௌர்ணமி நள்ளிரவில் பாழடைந்த வீட்டில் பிரபாகரனுக்கு நடந்தது என்ன?
தமிழகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த தம்பதியினரிடம், குழந்தை பாக்கியதம் பெறுவதற்கு பூஜை செய்வதாக கூறி, அவர்கள் தலையில் கல்லை போட்டு நகையை பறித்துச் சென்ற கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்.
இவருக்கும், ஜானகி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், குழந்தை இல்லை என்பதால், பிரபாகரன் மனைவி ஜானகியை பல மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதில் குழந்தை பாக்கியம் வேண்டி ஜானகியும் பல கோவில்களுக்கும் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது தான் காஞ்சிபுரத்தை அடுத்த தாமரைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் அறிமுகம் பிரபாகரனுக்கு கிடைத்துள்ளது .
இவர், பௌர்ணமி பூஜை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனக் கூறி, நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்,
தாமரைத்தாங்கல் மனோ மோகன் அவென்யூ பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பூஜை செய்ய வேண்டும், அங்கு இருவரும் வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது பாபு அந்த வீட்டின் உள்ளே யாகம் வளர்க்கத் துவங்கியுள்ளார். பூஜை செய்ய வேண்டும், இருவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் என்று பாபு, கூற இருவரும் அதே போன்று கண்களை மூடியுள்ளனர்.
நள்ளிரவு நேரம் என்பதால், அப்பகுதியில் ஆள் நடமாட்டமும் அந்தளவில்லை. இந்நிலையில் தான் பாபு, திடீரென்று அங்கிருந்த பெரிய கல் ஒன்றை எடுத்து பிரபாகரனின் தலையில் கல்லால் தாக்கி, ஜானகியிடம் இருந்து 10 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் தப்பியோடிய பாபுவை தேடி வருவதுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.