மாவீரர் துயிலும் இல்லக் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கை தடுப்பு!
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை உரிமையாளரின் சம்மதத்தோடு அளவிட்டு சுவீகரிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் அந்த நிலத்தை அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களால் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
காணி அளவீட்டுப் பணி இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து அங்கு ஒன்றுகூடிய மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் நில அளவீட்டைச் செய்யவிடாது தடுத்து நிறுத்தினர்.
“இந்தக் காணி உரிமையாளருக்கு பல ஏக்கர் காணிகள் இருக்கின்றன. இது அவருடைய காணியாக இருந்தாலும் எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட நிலம். இதனை அளவிட்டு இராணுவத்துக்கு வழங்க இடமளிக்கமாட்டோம்.
எமது பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் விவசாயம் செய்கின்றனர். இந்த காணியைத் துயிலும் இல்லத்துக்காக இராணுவத்திடம் இருந்து மீட்டு வழங்கவேண்டும்.
இராணுவத்துக்கு இதனை வழங்க முடியாது” என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் எதிர்ப்பினால் காணி அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டன.