இரசாயன ஆயுதத்தைவிட நிறைவேற்று அதிகாரம் ஆபத்தானது!
இரசாயன ஆயுதத்தைவிட, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை மிகவும் ஆபத்தானது. எனவே, அதற்கு முடிவு கட்டவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.
நாடாளுமன்றத்தில் இன்று ( 09 ) நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
” கடந்த 40 வருடங்களாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையானது எமது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. இரசாயன ஆயுதத்தைவிட இது மிகவும் ஆபத்தாகும்.
நிர்வாகக்கட்டமைப்பு, நாடாளுமன்றம், நீதித்துறை என அனைத்திலும் நிறைவேற்று அதிகாரம் ஆதிக்கம் செலுத்தியது. இதனால், பல பாதகமான விளைவுகள் ஏற்பட்டன.
இதனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்டுவேன் என அறிவிப்பு விடுத்துவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்குவந்தார். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்.
அதிகாரத்தை எவ்வாறு தக்கவைப்பது, மீண்டும் எப்படி போட்டியிடுவது என்பது குறித்தே சிந்தித்துவருகிறார். எனவே, 2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி காலை தாம் எப்படி இருந்தோம் என்பதை ஒருமுறை ஜனாதிபதி சிந்தித்து பார்க்கவேண்டம்.” என்றும் அவர் கூறினார்.