அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? – சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்விக்கணை

“மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது.?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அர்ஜூன் அலோசியஸ் குற்றமிழைத்தாரா என்பது தொடர்பாகவோ அல்லது அவருக்குப் பிணை வழங்கப்பட்டமை குறித்தோ நான் கருத்து தெரிவிக்க போவதில்லை.

ஆனால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சட்டத்தரணியின் வாதம் குறித்தே நான் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.

அர்ஜூன் அலோசியஸ் 11 மாதங்களாக மனைவியை, பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கின்றார் எனவும், கணவனைப் பிரிந்து மனைவி, பிள்ளைகள் இருக்க முடியாது எனவும் கூறி பிணை கோரப்பட்டமைக்கமைய அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

11 மாதங்களாக ஒரு குடும்பம் தனித்திருக்க முடியாது எனப் பிணை வழங்கப்படும் பட்சத்தில், 11 வருடங்களுக்கு மேலாக தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வாடுபவர்களுக்கு ஏன் பிணை வழங்க முடியாது?” – என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *