11 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறை மாபொல புலமைப்பரிசில்!
வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகங்களுங்குச் செல்லும் மாணவர்களுக்கு, மாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளை வழங்க, மாபொல புலமைப்பரிசில் நிதியம் தீர்மானித்துள்ளது.
இதுவரை, வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே மகாபொல புலமைப்பரிசில்களும், உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வந்தன.
இதேவேளை, மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப் பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை, 30 சத வீதத்தால் அதிகரிக்க, மகாபொல புலமைப்பரிசில் நிதியம் தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம், இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக நான்காயிரம் பட்டதாரி மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
தற்போது, ஏழாயிரம் பட்டதாரிகள், வருடாந்தம் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப் பெற்று வருவதாக, மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
கூடுதலான மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவே, பெற்றோரின் வருடாந்த வருமானத்தை, இவ் வருடம் முதல் 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம்.
இதுவரை, வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவிலும் குறைவான வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கே, குறித்த மகாபொல புலமைப்பரிசில்களும், உதவித் தொகைகளும் வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மகாபொல புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவோர் பட்டியலில், இவ்வருடம் முதல் கூடுதலான மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மகாபொல புலமைப்பரிசில் தொகையாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவை, பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.