மைத்திரிமீது மக்கள் நம்பிக்கை இழப்பு – ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு வெல்கம வலியுறுத்து!
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்பட வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘‘ நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு ஜனாதிபதியே பிரதான காரணம். அவரையே மக்கள் அனைவரும் விமர்சிக்கின்றனர்.
நாட்டின் அரசியலமைப்பை மீறியே தனது செயற்பாடுகள் அனைத்தையும் ஜனாதிபதி முன்னெடுத்தார். இதனால் அவர் மீது மக்களிடமும் சர்வதேசத்திடமும் எந்ததொரு மரியாதையும் இல்லாமல் போயுள்ளது.
ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகிய தேர்தலை நடத்துவதை காட்டிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி நாட்டின் சிறந்த தலைவரை நியமிக்க வேண்டியதே அவசியம்.” என்றும் கூறினார்.