31 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

வானில் கஞ்சா கடத்திய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

அவரிடம் இருந்த 31 கிலோ 700 கிராம் நிறையுடைய கஞ்சாவையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், புங்கன்குளம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணி அளவில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், அரியாலை ஏ.வி. வீதிப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், வான் ஒன்றில் பொதிகள் செய்யப்பட்ட நிலையில் 31 கிலோ 700 கிராம் நிறையுடைய கஞ்சாவை வானில் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது, விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், இளைஞர் சென்ற வாகனத்தை சோதனையிட்டபோதே வாகனத்திற்குள் பொதிகள் செய்யப்பட்ட நிலையில் கஞ்சா காணப்பட்டுள்ளது.

உடனடியாக விசேட அதிரடிப் படையினர், வாகனம் உட்பட கஞ்சாவையும் கைப்பற்றியதுடன், இளைஞரை கைதுசெய்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

கஞ்சாவையும் வாகனத்தையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *