வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!
திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு அவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இன்று (24) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர், கலந்துரையாடலில் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பாடசாலைகளுக்கு நேரில் சென்றார். அங்கு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு விஸ்வமடு பாரதி வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை இன்று 1.45 மணிக்கு சென்று நேரில் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அவர்களுக்கான தேவைகளைக் கேட்டறிந்து, “நீங்கள் எங்களுக்கு உதவியுள்ளீர்கள். எனவே, நிச்சயம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.