அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐ தாண்டினால் சட்டநடவடிக்கை – மஹிந்த அணி எச்சரிக்கை!
அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐவிட அரசு அதிகரிக்குமானால் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ரோஹித அபேகுணவர்தன எம்.பி. மேற்படி எச்சரிக்கையை விடுத்தார்.
” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளினதும், ஏனைய அமைச்சுகளினதும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐ விஞ்சுதலாகாது.
எனினும், இத்தொகையை குறுக்கு வழியில் அதிகரித்துக்கொள்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். திருட்டுத்தனமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமானால் நீதிமன்றம் செல்வோம். சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம்.
அதேவேளை, கட்சிதாவியோருக்கு அமைச்சுப் பதவியை வழங்காதிருக்க ஜனாதிபதி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.” என்றும் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.