மந்திரமோதி சினிமாப்பாணியில் யானையை அடக்க முற்பட்ட மந்திரவாதியை மிதித்துக்கொன்றது யானை – யால வனப்பகுதியில் பயங்கரம்!
மந்திர சக்தியால், எதிரில் வந்த யானையை அடக்க – கட்டுப்படுத்த முயற்சித்த மந்திரவாதியை, யானை தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் யால வனப்பகுதியில் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் – வள்ளி மாதாகம என்ற கிராமத்தைச் சேர்ந்த 41 வயது நிரம்பிய எல்.ஏ. சுசன்த என்ற மந்திரவாதியே, யானை தாக்கிய பலியானவராவார்.
உள்ளுர் சுற்றுலாவாசிகளுடன் யால வனப்பகுதிக்கு சென்ற, இவ் மந்திரவாதி, எதிரில் வந்த யானையை மடக்கி, திருப்பி அனுப்புவதாகக் கூறி, மந்திர உச்சாடனத்துடன், யானைக்கு முன் சென்றார். யானை பெரும் ஆவேசத்துடன் மந்திரவாதியை, தனது தும்பிக்கையினால் தூக்கி மிதித்துக் கொன்றது. மந்திரவாதி வைத்திருந்த கற்பூர வில்லைகள், சந்தனக் குச்சுகள் அவ்விடத்திலேயே சிதரிக்கிடந்தன.
இதைக் கண்ட உள்ளுர் சுற்றுலாவாசிகள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று கூறி, வந்த வாகனத்தில் ஏறி திரும்பிச் சென்றனர்.இது பற்றிக்கூறப்படுவதாவது, உள்ளுர் சுற்றுலாவாசிகளுடன், இம் மந்திரவாதியும் வாகனத்தில் ஏறி யால வனப்பகுதிக்கு சென்றார். அங்கு எதிரில் யானையொன்று வந்ததும், வாகனத்தை விட்டு இறங்கிய மந்திரவாதி, எதிரில் வரும் யானையை திருப்பி அனுப்புவதாகக் கூறி, வாகனத்தை விட்டு இறங்கி, யானைக்கு எதிராக, மந்திர உச்சாடனத்துடன் சென்றார். அவ் வேளையிலேயே, யானை ஆவேசமாகி, மந்திரவாதியைத்தாக்கிக் கொன்றது.
கதி;ர்காமம் பொலிசார், இச்சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யானை மிதித்து கொன்ற மந்திரவாதியின் சடலம், கதிர்காமம் அரசினர் மருத்துவமனை பிரேத அறையில், சட்ட வைத்திய பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பதுளை நிருபர்
எம்.செல்வராஜா