கவிழ்ந்தது ‘சூழ்ச்சி அரசு’ – எதிரணிக்கு செல்கிறது மஹிந்த அணி! பதவி இழக்கிறார் சம்பந்தன்!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் நாளையே ( 14) இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூட்டுஎதிரணி எம்.பியான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறுகோரி, அவர்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரேணை நாடாளுமன்றத்தில் நேற்று 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய அனுமதியை ஜனாதிபதி வழங்கவேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்கினால் தம்மை ஆளுங்கட்சி என அடையாளப்படுத்திக்கொண்ட, மஹிந்த – மைத்திரி கூட்டணிக்கு எதிர்க்கட்சிக்கு செல்லவேண்டிய நிலைஏற்படும். இதுதொடர்பில் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது,
” நாளையும் நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியாகவுள்ளது. அதன்பின்னரே எதிரணியில் அமர்வது குறித்தும், எனைய விடயங்கள் சம்பந்தமாகவும் முடிவெடுக்கப்படும்” என்றார்.
அதேவேளை, கூட்டரசிலிருந்து வெளியேறிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிரணிக்கு சென்றால் அம்முன்னணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு அப்பதவியை இழக்கநேரிடும்.