அரசியல் குழப்பத்தை நீடிக்கவிட வேண்டாம்! – கண்டியில் வைத்து அபாய சங்கு ஊதினார் அமெரிக்கத் தூதுவர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்பின் பிரகாரம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கண்டிக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ், அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
தலதா மாளிகைக்குச் சென்று ஆன்மீக வழிபாட்டிலும் அமெரிக்கத் தூதுவர் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி துரிதமாக அரசமைப்பின் பிரகாரம் தீர்க்கப்படவேண்டும். அந்தச் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றோம். அதன்பின்பே ஏனைய விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிட முடியும்” என்று கூறினார்.
அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம், அரசியல் குழப்பத்துக்கு தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வரவேண்டும் என இதற்கு முன்னரும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.