மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது நீதிமன்றம்! – இனியாவது அவர் திருந்த வேண்டும் என்கிறார் சம்பந்தன்
“122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது. இனியாவது அவர்கள் திருந்த வேண்டும். தங்கள் பதவிகளை அவர்கள் உடன் துறந்து ஜனநாயக ஆட்சிக்கு இடமளிக்க வேண்டும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய அரசு சட்டவிரோத அரசாகும். இதை நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு மூலம் நிரூபித்துள்ளது. இறுதித் தீர்ப்பும் இந்தச் சட்டவிரோத அரசுக்கு எதிராகவே அமையும்.
அரசியல் சதித் திட்டத்தால் உருவான இந்த அரசில் உள்ளவர்கள் பிரதமர் பதவி, அமைச்சுப் பதவிகளை உடன் துறக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட இடமளிக்க வேண்டும்” – என்றார்.