மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை!
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த வேளையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி மரியாதை செலுத்தினார்.
பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி, உடுகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு நேற்று சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 30ஆம் திகதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.