‘ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ – பொதுத்தேர்தலை நடத்துமாறு மஹிந்த உடும்புப்பிடி!
மக்கள் ஆணையே உயரிய தீர்வாகும். எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டுமென்றால் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பிதமர் மஹிந்த ராஜபக்ச.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் மஹிந்தவால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
” அரசைமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் கடக்கும்வரை நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு முன்கூட்டியே கலைக்கப்படவேண்டுமென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவோடு பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகில் பெயரளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்ட நாடுகளில் கூட அவசர காலங்களில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரமில்லை என்பது துரதிஷ்டவசமானது ” என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.