சபையில் எம்.ஜி.ஆராக மாறிய செல்வம் எம்.பி.!
சபாநாயகர் கருஜயசூரியவை பாராட்டியும், வாழ்த்தியும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் சபையில் இன்று உரையாற்றினர்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் முற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இன்றைய தினமும் ஆளுங்கட்சியான மஹிந்த, மைத்திரி கூட்டணி சபை அமர்வை புறக்கணித்திருந்தது.
அவையில் தினப்பணிகள் முடிவடைந்தபின்னர், சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது. இதில் பங்கேற்று உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர்கள், சபாநாயகர்மீது பாராட்டு மழை பொழிந்தனர்.
ஜனநாயகத்தின் காவலன், துணிச்சலான சபாநாயகர், வரலாற்றில் இடம்பிடித்துவிட்டீர்கள் என்றெல்லாம் போற்றி புகழ்ந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தமதுரையின்போது, சபாநாயகரின்கீழ் குழுக்களின் பிரதித் தலைவராக பணியாற்றுவது பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்டார்.
” ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என எம்.ஜி.ஆர். பாடுவார். இப்பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் எம்.ஜி.ஆர்கூறியதுபோல், தவறை நீங்கள் தட்டிக்கேட்டுள்ளீர்கள். பாராட்டுகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்.