என்மீது பெற்றோல்குண்டு தாக்குதல் நடத்த சதி – பதறுகிறார் வடிவேஸ் சுரேஸ்!
தனக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று கோரிக்கை விடுத்தார் வடிவேல் சுரேஸ் எம்.பி.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே வடிவேஸ் சுரேஸ் இவ்வாறு முறையிட்டார்.
” பதுளை மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்கள் பிரதிநிதியான எனக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சபையில் மிளகாய்த் தூள் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பதுளையில் கூட்டத்துக்கு சென்றால் அங்கு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்த சூழ்ச்சி செய்யப்படுகின்றது.
நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். பொலிஸில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை இல்லை. முறைப்பாட்டை கணக்கில் எடுக்காத அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, எனக்காக வீதியில் இறங்கி போராட மக்கள் தயாராகவே இருக்கின்றனர்” என்றும் வடிவேஸ் சுரேஸ் கூறினார்.
அதேவேளை, வடிவேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜோன் அமரதுங்க எம்.பியும் சபாநாயரிடம் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் பேசுகின்றேன் என்று சபாநாயகர் பதிலளித்தார்.