சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்போம்! – மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற பின் ரணில் தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்றுக் காலை கண்டிக்கு விஜயம் செய்த ரணில், அங்கு அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் ரணிலுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

இதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மைத்திரியின் சதித் திட்டத்தினால் கடந்த 26ஆம் திகதி நல்லாட்சி கவிழ்க்கப்பட்டது. மீண்டும் மஹிந்த அரியணை ஏறி சர்வாதிகாரத்தைத் தொடர்கின்றார். மைத்திரி – மஹிந்தவின் இந்தக் கூட்டாட்சி – சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டியே தீருவோம். சர்வாதிகாரத்திடமிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது ஆட்டம் போடுகின்ற மஹிந்த அணியை வீட்டுக்கு அனுப்புவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *