அலரிமாளிகைக்குள் ரணிலை முடக்க சதி – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களை, அலரிமாளிகைக்குள் தனிமைப்படுத்துவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ச்சி செய்கின்றனரா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே கூட்டு எதிரணி எம்.பியான ரொசான் ரணசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
” பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலமே அலரி மாளிகையின் முழுமையான பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் செயலகத்துக்கான நிதி நிறுத்தப்படுமானால் பராமரிப்புகள் தடைபடும். நீர், மின்சாரம், எரிபொருளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே, ரணிலை அலரி மாளிகையில் தனிமைப்படுத்த சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை விரைவில் நிரூபிக்கப்படும் என்றும், தேர்தலொன்றுக்கு செல்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.