ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகிறது ஐ.தே.க. – நடுத்தர வயதுடைய பொதுவேட்பாளர் தயார்நிலையில்!
மக்கள் கருத்தறிய வேண்டுமானால் 2019 ஜனவரி 08 ஆம் திகதிக்கு பிறகு ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிபால சிறிசேன நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று வலியுறுத்தியது.
கண்டிக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.தே.கவின் உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து – சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடினர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளரான நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
” மஹிந்த ராஜபக்ச தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால், அதை அவர்கள் நிரூபிக்கவேண்டும். பெயர்கூவியோ அல்லது இலத்திரனியல் முறைப்படியோ வாக்கெடுப்பை சந்திப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனினும், பெரும்பான்மை இன்மையாலேயே கூட்டுஎதிரணி பின்வாங்குகின்றது.
அதேவேளை, மக்கள் கருத்தறிய வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஜனாதிபதித் தேர்தலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு நிகரானதாகும். எனவே, ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுக்கவேண்டும்.
பொதுவேட்பாளர் ஒருவரையே ஐ.தே.க. இம்முறையும் களமிறக்கும். அது நடுத்தர வயதுடைய நபராகக்கூட இருக்கலாம்” என்றும் கூறினார்.