அரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்! – சம்பந்தன் நம்பிக்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அது நீக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதாக இருந்தால், நான்கரை ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும்.

மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாகத் தான் எடுத்த முடிவு படுதோல்வியடையப் போகின்றது என்ற அச்சத்தாலே நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் இந்த உண்மை தெரியும்.

ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது கூடாது என்பதிலும், தான் நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் தோற்கக் கூடாது என்பதிலுமே குறியாக இருந்தார். ஆனால், அவரின் திட்டம் படுதோல்வியை நோக்கிச் செல்கையில் அந்த அவமானத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக நாடாளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்துள்ளார். அவர் தனது தன்னிச்சையான முடிவுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வழங்கிய ஆணையை மீறி விட்டார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *