14 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை முடிந்த கையோடு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்! நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறாது?
நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும்போது ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மாத்திரமே இடம்பெறும் என்றும், அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய தேவை இல்லை என்றும் மைத்திரி அணி எம்.பியான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பிரதமர் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தேவையில்லை. அன்றைய தினம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது. ஆளுங்கட்சி என்பதால் எமக்கே நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குரிய பகுதி ஒதுக்கப்படவேண்டும். இதுவிடயத்தில் சபாநாயகர் கட்சிசார்பின்றி செயற்படவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அரசமைப்பிலுள்ள ஏற்பாட்டின் பிரகாரமே 14 ஆம் திகதி நடவடிக்கை இடம்பெறும். அதற்கு புறம்பாக எதுவும் நடக்காது என்று ஆளுந்தரப்பு பேச்சாளர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.