ரஞ்சித் மத்தும பண்டாரவின் கடிதத்தை கண்டுகொள்ளாதீர் – அரச ஊழியர்களுக்கு அறிவித்தல்
ஊடகத்துறை அமைச்சில் காணப்படும் நிறுவனங்கள் தொடர்பான விடயதானங்கள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து அமைச்சர் தெரிவிக்கையில்,
அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு உட்பட்டதான அமைச்சுக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய அரச நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு வரையறை குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் , இன்றைய பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சின் உத்தியோகபூர்வ முகவரியடங்கிய கடிதத்தாளில் அரச ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியிருப்பது தொடர்பில் எந்தவித கவலையும் கொள்ளத்தேவையில்லை என்று கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.
அமைச்சுக்களை எந்தவேளையிலும் பொறுப்புக்களை ஏற்று நடத்தும் அதிகாரம் அமைச்சுக்களின் செயலாளர்களை சார்ந்ததாகும்.அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை என்பதினால் அமைச்சுக்களின் பணிகளை தடையின்றி முன்னெடுக்கும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களை சார்ந்ததாகும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறன நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பிய கடிதம் எந்தவகையிலும் வலுவற்றதாகும் என்றும் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரசியல் யாப்பிற்கு அமைவாக அமைச்சிற்கு செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு அதனடிப்படையிலேயே ஜனாதிபதி செயற்பட்டுவருகின்றார். புத்திசாலித்தனமானவர்கள் இதனால் இந்த கடிதத்திற்கு பதிலளிக்க தேவையில்லை. பாராளுமன்ற பிரதிச்செயலாளர் நாயகம் நீல் தித்தவல இதற்கு எடுத்துக்காட்டாகும். சபாநாயகர் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்போதிலும் அவர் திட்டவட்டமாக அரசியல் யாப்பிற்கு அமைவாக ஜனாதிபதியின் கட்டளைக்கமைவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.