இலங்கையில் இரத்தக்களறி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு! – எச்சரிக்கின்றார் ரணில்

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக் கூடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.எவ்.பிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி மைத்திரி தடைகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு ஜே.வி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளித்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை அல்ல. அரசமைப்புக்கு முரணானவை என நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசில் ஜனாதிபதியுடன் மோதல் வரும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், பதவி நீக்கம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றால் தற்போதைய நெருக்கடி நீண்ட நாட்கள் நீடிக்காது ஆகக்கூடியது பத்து நாட்கள் நீடிக்கும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.