ரத்தன தேரரும் மஹிந்த பக்கம் தாவல் – ரணிலை எதிர்க்க முடிவு!
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தன தேரரும், மஹிந்த – மைத்திரி கூட்டணியில் இணைந்துள்ளார்.
‘புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு ஆதரவளிக்கப்படும்’ என்று கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அறிவித்தார்.
“ நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றேன். எனவே, புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும்.
அரசியல் நலனுக்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. நாட்டின் நலனை முன்னிருத்தியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. புதிய பிரதமருடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றும் கூறினார்.
ஜாதிக ஹெல உறுமய ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரத்தன தேரர், சம்பிக்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அதிலிருந்து வெளியேறினார்.
பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரியை ஆதரித்ததால், ஐக்கிய தேசியக்கட்சி இவருக்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கியிருந்தது.
கூட்டு அரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.