பதிலடிக்கு தயாராகிறது ஐ.தே.க. – மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கையளித்துள்ளது.
சபைமுதல்வரும், ஐ.தே.கவின் மூத்த உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்லவின் கையொப்பத்துடனேயே குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
“ ; பிரதமர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படாத சந்தர்ப்பத்தில் , ஜனநாயகத்துக்கு முரணான வகையில் மஹிந்த நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசமைப்பின் சரத்துகளை மீறும் செயலாகும்” என்றும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்மிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை இருப்பதாக மஹிந்த, மைத்திரி கூட்டணி அறிவித்துவரும் நிலையில், அதற்கு பதிலடிகொடுக்கும் நடவடிக்கையாகவே ஐ.தே.கவால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் பிரதமராக மஹிந்தவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் சபைக்குள் மஹிந்தவுக்கு வழங்கப்படும்.மஹிந்தவை ஐ.தே.க. பிரதமராக ஏற்காவிட்டாலும், இந்த வர்த்தமானி அறிவித்தை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.