17 ஆயிரம் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: பகிரங்க மன்னிப்புக் கோரினார் ஆஸி. பிரதமர்
பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு கால ஆய்வு முடிவில் 17 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொல்லைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டு வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையறிந்த ஸ்காட் மாரிசன், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
“நம் தேச குழந்தைகள் ஏன் காக்கப்படவில்லை? ஏன் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது? குழந்தைகளின் அழுகை ஏன் புறக்கணிக்கப்பட்டது? நீதியின் கண்கள் ஏன் பார்வையிழந்தது? செயற்பட இவ்வளவு காலம் தாமதமானது ஏன்? அப்பாவிக் குழந்தைகளை பாதுகாப்பதை விட வேறு என்ன முக்கிய பணி இருந்தது?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி குழந்தைகளிடம் மன்னிப்புக் கோரினார்.
இதையடுத்து அங்கு அமைதி நிலவியது. குழந்தைகளைக் காப்பதற்கான ஆய்வுக் குழுக்கள் அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார்.